முதியோரின் மனசு 

எனது பெயர் சாந்தி. எனக்கு வயது 90. எனக்கு மூன்று மகன்கள் ஐந்து பேரப்பிள்ளைகள்  இருந்தனர். இத்தனை பேர் இருந்தும் என் வீட்டில் நான் அனாதையாகவே இருந்தேன். வழக்கம் போல அன்று அதிகாலை எழுந்ததுமே மருமகள் சண்டை போட்டு கொண்டிருந்தாள்.

 எப்போ உங்க அம்மாவை எப்போ முதியோர் இல்லத்தில் விடப்போறிங்க? என்று கேட்டாள். என்னால உங்க அம்மாவை வைத்து பார்க்க முடியாது. கிழவி எழுந்திச்சி நடந்தாலும் பரவாயில்ல. ரூம் எல்லாம் நாறுது. செத்தும் தொலைய மாட்டிங்குது என்று கத்தினாள். இதை கேட்டதும் சாந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என் மகன் கூட அவள் பேசியத்திற்கு ஒன்றுமே சொல்லவே இல்லை. என் பழைய நினைவுகளை நினைத்தேன்.

எனது கணவர் இருந்தவரைக்கும் என்னை நன்றாக கவனித்து கொண்டார். அவரது மறைவுக்கு பின் என்னை யாரும் கவனிப்பதே இல்லை. எனக்கு மூன்று மகன்கள் இருந்தும் என்னை கவனிக்க யாருமே இல்லை.

வயது முதிர்வின் காரணமாக என்னால் எழுந்து  நடக்க கூட முடியவில்லை.  என்னை கொண்டு வந்து முதியோர் இல்லத்தில் விட்டனர். கனத்த இதயத்துடன் முதியோர் இல்லத்தில் இருந்தேன். யாரிடமும் பேசாமலே இருந்தேன். சாப்பிட கூட மனதில்லை. அந்த முதியோர் இல்லத்தை ஒரு வயதான பெண்மணி நடத்தி வந்தார். சாப்பிடலாமலே செத்துவிடலாம் என்று நினைத்தேன். சாப்பாட்டை பார்க்கும் பொழுது எல்லாம் என் பிள்ளைகள் ஞாபகம் வரும். என் பிள்ளைகளை நான் பசியாக இருக்க விட்டதில்லை. ஆனால் இன்றோ, என் பிள்ளைகள்  ஒருபிடி சோறு போட மனதில்லை. என் பிள்ளைகள் என்னோடு இருந்தாலும் நான்  வீட்டில் அனாதையாகத்தானே வாழ்ந்து வந்தேன். என்னிடம் அன்பு காட்டவோ, அல்லது சிரித்து பேசவோ  யாரும் இல்ல. என் பேரப்பிள்ளைகள் கூட என்னிடம் பேச மாட்டார்கள். எல்லாரும் இருந்தும் அந்த வீட்டில் அனாதையாக வாழ்ந்த எனக்கு இங்கே மட்டும் என்ன?, என்று சிந்தித்து கொண்டிருந்தேன். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இப்படி நான் சிந்தித்து கொண்டிருந்த வேளையில், அந்த வயதான பெண்மணி என்னிடம் பேசினார். எனக்கோ அவரிடம் பேச மனதில்லாமல் இருந்தது. ஆனாலும் அவர் பேசிய விதமும், காட்டிய அன்பையும் பார்த்து வியந்தேன்.

ஏனென்றால் என் கணவன் மறைவுக்கு பின் என்னிடம் யாரும் இப்படி அன்பு காட்டியது இல்லை. அந்த வயதான பெண்மணிக்காக சாப்பிட ஆரம்பித்தேன். எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எனக்காகவும் இந்த உலகத்தில் ஒருத்தர் இருக்கிறார், என் மீது அன்பு காட்டவும் ஒருத்தர் இருக்கிறார் என்று நினைக்கும் பொழுது ஆறுதல் அடைந்தேன். மரணத்தை நோக்கி என் வாழ்க்கை நகர்ந்தது. என் பெலன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. ஒரு நாள் திடிரென்று எனக்கு மூச்சை அடைப்பது போல் இருந்தது. எனக்கு தெரியும் என் வாழ்க்கையின் கடைசி நாள் அது என்று. என் வீட்டுக்கு தகவல் அளித்தனர். எல்லரும் வந்தார்கள். இதுவரைக்கும் என்னை வந்து பார்க்க வராதவர்கள் அன்றைக்கு வந்தனர். என்னை பரிசோதித்த மருத்துவர்கள், இன்னும் அரைமணி நேரத்தில் என் உயிர் என்னை விட்டு போகப்போவதாக கூறினார்கள். என்னிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக ஒவ்வொருத்தராக எனக்கு  கடைசி பால் ஊற்ற வந்தனர். இதுவரை என்னை கவனிக்க வராதவர்கள், ஆசிர்வாதம் பெற மட்டும் வருகிறார்கள் என்று நினைத்து என் வாயை இருக்க மூடி கொண்டேன். கடைசியாக என்னை கவனித்த அந்த வயதான பெண்மணி என்னிடம் வந்தார். அந்த வயதான பெண்மணியை கண்டதும் எனக்குள் மகிழ்ச்சி. அவர்  கடைசியாக எனக்கு பால் ஊற்றினார். சந்தோசமாக குடித்தேன். என் உயிர் அவர் கைகளில் சந்தோசமாக பிரிந்தது.

இன்றைக்கும் என்னை போல் பல முதியோர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களது மனதில் கடைசி வரை சோகத்தோடு மரிக்கிறார்கள். படித்த கதைகளில் வலித்த கதை இது. முதியோர் இல்லத்தில் விடப்பட்ட ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு வலிகளோடு மரிக்கிறார்கள். தயவு செஞ்சு நம்மை கவனித்து ஆளாக்கிய பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடாதீங்க|…